முழு மாட்டை முழுங்கிய மலைப் பாம்பு போல் சோம்பலோடு நகர்ந்த ஒரு ஞாயிறு மதியத்தில் பாடியது எனது செல் போன். எடுத்து பார்த்தால், என்னோடு அலுவலகத்தில் பணி புரிந்த நண்பனின் அழைப்பு.
என்னடா ராஜ், என்ன விஷயம்? நல்லா இருக்கியா?
"நான் நல்ல இரிக்கேம்பா" கொஞ்சம் எக்கோ எஃபெக்ட்டில் கேட்டது அவன் குரல்.
என்னடா குரல் எக்கோ எஃபெக்ட்டில் கேக்குது? எங்க இருக்க.
நானா? நான் பாத்ரூம்ல இரிக்கேண்டா. ஹா..ஹா...ஹா....
அடப்பாவி இந்த நேரத்துலயாடா உனக்கு என் ஞாபகம் வருது?
சீ கழுத உனக்கு எப்பவுமே கிண்டல் தாண்டா. கசின் கல்யாணம் இன்னைக்கு செம பிஸி. 'இதுக்கே' இப்போ தான் நேரம் கெடச்சுது. நாளைக்கு இவினிங் ரிசப்ஷன் இருக்கு நீ கட்டாயமா வரணும்.
எந்த கசின்? அந்த சேட்டுப் பொண்ண லவ் பண்ணி கல்யாணம்? அவரா?
அவனே தான்.
"அவருன்னா கட்டாயம் வருவேன். சேட்டு ஃபிகருங்க வரும்ல" என்று கொஞ்சம் உற்சாகமானேன்.
ஹா..ஹா..........ஹா........ஹா.....வா வா.
மறுநாள் ஒரு வார தாடியை சவரம் செய்து கொஞ்சம் பள பள பச்சை சட்டை துவைத்த பேன்ட் என்று கொஞ்சம் பார்க்கும்படி திருமண மண்டபத்துக்கு( அதை அப்படி சொல்ல முடியாது. அது உலோகத்தால் செய்த ஒரு டீசன்டான குடவுன் அவ்வளவு தான். அதற்கு வாடகை 50 ஆயிரம் என்று தெரிந்த போது லேசாக தலை சுற்றியது.)
படுபாவி ராஜ் வர வில்லை அங்கே. அதாவது பரவாயில்லை. யாரும் வர வில்லை இன்னும். இந்தியாவில் சொன்ன நேரத்துக்கு எங்கும் போகக் கூடாது என்பதை இன்னொரு முறை இது உணர்த்தியது. அவனிடம் போன் போட்டுக் கேட்டால்," உள்ள பொய் உக்காரு. யாராது கேட்டால் என் பேர சொல்லு" என்றான் கூலாக.
உள்ளே அடி மேல் அடி எடுத்து வைத்து கடைசி வரிசையின் இருக்கை நுனியில் அமர்ந்தேன். ஒரு இரண்டு வினாடியில் என்னை போல் ஒரு ஏமாந்தவர் தன் குடும்பத்தோடு வந்தார். அவர்கள் பேசுவது தெலுகா இல்லை தமிழா என்று என்னால் சரி வர கேட்டுணர முடியவில்லை. (பொதுவாவே கழுதைக்கு ஒட்டுக் கேக்குறது பிடிக்காது. நம்புங்க ப்ளீஸ்....) என் அவர்கள் பேசுவது தமிழா என்ற சந்தேகத்திற்கு காரணம் ராஜ் என்ற ராஜசேகரன். அவனை பற்றிய ஒரு சிறு குறிப்பு கூற வேண்டும் இங்கு.
ராஜசேகரன் ஹைதராபாதில் வளர்ந்த மூன்றாம் தலைமுறைத் தமிழன். அவனை தமிழ் நாட்டில் வளர்ந்த அவன் வயது இளைஞர்களே தமிழை மறந்து கொண்டிருக்கும் வேளையில், இன்னும் திக்கித் திக்கி மழலை தமிழ் பேசுபவன். தமிழில் அவ்வளவாக கெட்ட வார்த்தைகள் தெரியாமல் என்னிடம் கேட்டுப் படித்து என்னோடு நட்பை ஆரம்பித்தவன். போதும் எங்கள் தெய்வீக நட்பு பற்றிய சிறு குறிப்பு என்று நீங்கள் சொல்வதால்......
ஒரு இரண்டு நிமிடத்தில் என் காதில் காலடி ஓசை கேட்டது. திரும்பி பார்த்தால் ராஜ் ஒரு டெட்ரா பேக் ஜூஸ் குடித்தபடி ஒய்யாரமாக நிற்க்கிறான்.
"பாவி.படுபாவி. வர்ற நேரமாடா இது?"
"சாரிப்பா.....எவ்ரி வன் வாஸ் டயர்ட் ஆஃப்டர் லாஸ்ட் நயிட்." அவன் கையில் இருந்து கசக்கி எறியப்பட்ட காலி டெட்ரா பேக் போல் ஆனது என் மனது.
"சொல்வீங்கடா சொல்வீங்க ஓசில சோறு போடுரீங்கள்ள?" - சிரித்தான்.
சரி வா என்று நேராக சமயலறைக்கு அழைத்து சென்றான். அங்கே மிளகாய் தூள் சிவப்பில் ஏதோ வரு பட்டுக் கொண்டிருந்தது. கோழியா? என்று கெட்ட மனது, ச்சே...ச்சே.....கல்யாண ரிசப்ஷன்ல யாருடா கோழி போடுவா என்று சமாதானம் செய்தது. ஆனால் சட்டி பக்கத்தில் போக போக ரெக்கை, சப்பை, நெஞ்சு என்று பல கோழிகள் வரு படுவதை பார்த்து நம்ப முடியாமல் அவனிடம் கேட்டு விட்டேன். "டேய்.........என்னடா இது கோழி மாதிரி இருக்கு?"
"ஆமாம்பா ரிசப்ஷன் தான? வெஜ் நான்-வெஜ் ரெண்டுமே இருக்கும்." எனக்கு லேசாக பசிப்பது போல் இருந்தது. அதற்குள் அங்கே டி. ஜே. என்ற பெயரில் இரண்டு பேர் காதுகளை பதம் பார்க்க துவங்கி இருந்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக ராஜின் உற்றார் உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள். ஆங்கிலத்தில் அறிமுகப் படலங்களும், கை குலுக்கல்களும் முடிந்த பின், என்னை முன்னே வந்து அமரும் படி கூறி விட்டான். நான் ஒரு ஓரமாக அவர்கள் இல்லாத வரிசையில் போய் அமர்ந்தேன். அவன் அங்கும் இங்கும் சுற்றி வர ஆரம்பித்து விட்டான். சரி இனிமேல் நமக்கு அவனோடு என்ன வேலை. சாப்பிட்டு கெளம்ப வேண்டியது தான் என்று நினைத்தேன். அவர்கள் உறவினர்களில் யாரோ ஒரு நல்லவர் அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுவனை என் பக்கத்தில் துணைக்கு உட்க்கார சொன்னார்கள். சரி நாமளும் ஏதாது பேசலாமே என்று அவனிடம் நான் பேச ஆரம்பிக்க, ஒரு இரண்டு நிமிடம் கேட்டவன், நெற்றி சுருக்கி அவனுக்கு தமிழ் தெரியாதென்று ஆங்கிலத்தில் சொன்னான். சுத்தமாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டானா என்று கேட்டதற்கு தமிழ் புரிந்து கொள்வேன் என்று கூறினான். ஏதாது சொல்லிக் கொடுக்கலாமா என்று நினைத்தேன். சரி கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொள்ள இன்னும் வயசிருக்கு பய்யனுக்கு என்று என் தமிழ்ச்சேவையை தள்ளிப் போட்டேன்.
அவனிடம், ரஜினி காந்த், மகேஷ் பாபு போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பற்றி பேசிவிட்டு, அவன் படிப்பு பற்றி பேச ஆசைப்பட்டேன். சரி அவன் பள்ளியில் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்று கேட்டேன். வருடத்துக்கு ஆறு லட்சமாம். கேட்டதும் என்னால் நேராக உட்க்கார முடியவில்லை. எனது திறந்த வாயைப் பார்த்து பய்யன் கொஞ்சம் பயந்து விட்டான். அது ஏதோ இன்டர்நேஷனல் ஸ்கூல் திருடர்களாம். அட பாவிகளா என் மகனெல்லாம் படிக்க வைக்கவே முடியாதே என்னோட சம்பளத்துல? கழுதை பய புள்ளைய வீட்டுல உக்காத்தி வச்சி சொல்லிக் குடுத்திகுரனும்நு பயந்து இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல், எச்சி முழுங்கி ஆசுவாசப்படுத்தி "தம்பி இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு ஸ்கூல் சரி இல்லைன்னு சொன்னியே அங்க எவ்ளோ இருக்கும்னு கேட்டேன்."நாலு லட்சம்". அந்த சிறுவன் ஒன்றும் மருத்துவமோ இல்லை விண்வெளி விஞ்ஞானமோ படிக்க வில்லை. ஆறாம் வகுப்பு தான். என்னால் ஆவலை அடக்க முடியவில்லை.
"அப்பிடி என்னடா இருக்கு அந்த ஸ்கூல்ல?"
"எல்லாமே இருக்கு."
போக வர பஸ். சாப்பாடு. அப்பறோம் குதிரை ஏற்றம் முதற்க் கொண்டு எதெதுவோ இருக்கிறதாம். சரி தான். பெரியவனாகி வேலை கெடைக்கலைனா கூட, குதிரையில போய் அலிபாபா கதை கொள்ளைகாரங்க மாதிரி பிழைச்சிக்கலாம்னு நெனச்சிக்கிட்டேன். அதற்குள் கூட்டம் கணிசமாக சாப்பாடு நோக்கி நகர்ந்தது. நான் ராஜிடம் சென்று ஒட்டி கொண்டேன். சில சிறப்பு விருந்தினர்களுக்கு ரகசியமாக மது பாட்டில்கள் வந்தன. மன்னிக்கவும் சென்றன. ராஜ் உண்ணும் படி கூறினான். இல்லை உன்னோடு சேர்ந்து சாப்பிடுகிறேன் என்றதும் அவன் சாப்பிட நேரம் ஆகும் என்றான். "பரவாயில்லை"- இன்னும் அந்த கல்விக் கூட கொள்ளையர்களின் நினைவிலேயே இருந்தேன்.
ராஜும் நானும் அமைதியாக கல்யாண மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்க்கார்ந்தோம். அங்கே தமிழ் ஹிந்தி என்ற இரண்டு மொழிகள் கைமா ஆகிக் கொண்டிருந்தன. "கௌன் சொன்னான்டா ஐஸா?" "பெரியப்பா கோ நான் தேக்கா நகின்." இப்படி என்ன மொழி என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது.
"சாப்பிடலாம் வா" என்றான் ராஜ். சரி என்று இரண்டு ரொமாலி ரொட்டி, கொஞ்சம் மட்டன் பிரியாணி, சிக்கன் மசாலா என்று வழக்கம் போல் சிம்பிளாக சாப்பிட்டு முடித்தேன். அந்த பிரியாணி இந்த ஊரில் உள்ள தலை சிறந்த பிரியாணி என்று கொண்டாடப்படும் பாரடைஸ் பிரியாணியை விட மிகவும் சுவையாக இருந்தது. அங்கிருந்த டபிள் கா மீட்டாவும், அவ்வளவு சுவையாக இருந்தது என்னால் இரண்டாவது முறை வாங்கி உண்ணாமல் இருக்க முடியவில்லை. இவை எல்லாம் சேர்ந்து அது ஒரு தமிழ் குடும்பத்து கல்யாணம் போல் தெரியவில்லை எனக்கு. தமிழ் பெண்கள் ஜிகு ஜிகு சேலையிலும், வடக்கத்தி பாணி சேலைக் கட்டிலும் அன்னியப் பட்டு தெரிந்தார்கள். பெண் வீட்டு மார்வாடிகள் சிக்கனை பார்த்து நெளிந்தார்கள்.
சேட்டு பெண்களை சயிட் அடிக்கும் ஆசையில் சென்ற எனக்கு அங்கே இருந்த சேட்டு பெண்கள் யாரும் ப்ரீத்தி ஜிந்தா போலவோ இல்லை நம்ம நமீதா போலவோ இல்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான். என்ன செய்ய? ஆனால் இங்கே வர முக்கிய காரணம் ராஜின் கசின். ஏன்?
இந்த திருமணம் காதல் திருமணம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த சுவாரசியமான காதல் கதை தெரியாது. இந்த காதல் கதை ஜோடிகள் இருவரும் 15, 16 வயதில் இருக்கும் போது தொடங்கியது. பத்தாம் வகுப்பில் ஆரம்பித்தது. சில வருடம் காதலிலேயே கழிந்திருக்கிறது. பெண் வீட்டிலோ அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். நேராக நம்ம கதாநாயகனிடம் வந்திருக்கிறார் அவர். "ஓடிப் போலாமா?" என்று அப்போது வந்த மணி ரத்னம் பட வசனம் பேசி இருக்கிறார். கதாநாயகன் காதலுக்கு மரியாதை செய்யும் நேரத்தில் தன் பெற்றோருக்கு மரியாதை குறைந்து விடக் கூடாது என்ற நல்லுள்ளம் படைத்தவர். "இங்க பாருமா நான் படிச்சிட்டு தான் இருக்கேன் இன்னும். என்னால உன்னை வச்செல்லாம் காப்பாத்த முடியாது. போக எங்க அய்யா ஆத்தாவல்லாம் தலை குனிய வைக்க முடியாது. அதுனால உங்க அப்பா பாத பையன கட்டிக்க."- இப்படி முடித்து விட்டார். பொண்ணு என்ன கெஞ்சியும் அசரல.
அந்த துரதிர்ஷ்டக் கல்யாண நாளும் வந்தது. கல்யாணமும் முடிஞ்சது. பொண்ணு கல்யாணம் பண்ணிக் குடுத்தது சென்னை ஸொவ்கார்பேட்ல. வைர வியாபாரிங்களாம். அந்த கல்யாண நாள நான் துரதிர்ஷ்டமானதுன்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த பொண்ண கல்யாணம் பண்ணவர் பாவம் இறந்து போயிட்டாரு. ஒன்னரை வயசு கைகொழந்தயக் கைல வச்சிக்கிட்டு இந்த அம்மா கைம்பெண் ஆயிட்டாங்க. அப்புறம் விதி இவங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சிருக்கு. இவரு கல்யாணம் பண்ணிக்கல இன்னும். ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி டும் டும் தான்.
என்ன பொறுத்த அளவு உலகத்துலேயே சிறந்த காதல் ஜோடின்னு நான் நெனச்சது புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி தான். ஆனா அத தமிழ் நாட்டு பத்திரிக்கை எல்லாம் கிழிச்சு நார் நாரா தொங்க விட்டுருச்சு. நான் ரோமியோ ஜுலியட், அம்பிகாபதி அமராவதிஎல்லாம் பாத்ததில்லங்க. அவங்க காதல்லாம் தான் அமரக் காதலானும் எனக்கு தெரியாது. ஆனா எனக்கு தெரிஞ்ச சிறந்த காதல் ஜோடி என் கண்ணால பாக்க கூடிய ஒரு காதல் ஜோடி இவங்க தான். இவங்கள பாக்காம விட்டிரக் கூடாது அப்படின்னு என் மனசுக்கு தோணிச்சு. இந்த கதைய பத்தி கேட்டப்போவே ராஜ் கிட்ட சொல்லி இருந்தேன் என்ன கட்டாயமா கூப்டணும்னு. அவன் மறக்கலை. இப்போ கல்யாணத்துக்கு அந்த அம்மாவோட அஞ்சுவயசுக் கொழந்தை வரலையாம். அந்த பாப்பா வளர வளர அதுக்கு அவங்க மேல மதிப்பும் அன்பும் வளரும்னு நான் நம்புறேன். நீங்களும் நம்புங்க. நம்பிக்கை இல்லைனா என்ன வாழ்க்கை?
Labels: உணவு, கலாச்சாரம், காதல், தமிழ், திருமணம், பள்ளி