பகடை - பகுதி 1
The First Encounter
தினத்தந்தி அக்டோபர் 9, சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டான். அவனது கூட்டாளிகளான ஷண்முகம், பாபு மற்றும் சப்பை (எ) சேகரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். மேலும் சிங்கம் (எ௦) சுந்தரம், ஜோசப், மற்றும் அர்ச்சுனன் ஆகியோர் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தனர். இந்த என்கவுன்ட்டர் பகல் பொழுதில் பொது மக்களின் பார்வையில் நடைபெற்றது. இருப்பினும் பொது மக்களில் எவருக்கும் ஒரு சேதமும் இல்லை. இது பற்றி குறிப்பிட்ட காவல் துறை ஆய்வாளர், இந்த என்கவுன்ட்டரில் பொது மக்களின் உதவியும் பெரும்பங்கு ஆற்றியதாகக் கூறினார்.
அக்டோபர் 10,
படித்து முடித்த கார்த்திக் ஒரு திரி பற்ற வைத்த சிவகாசி ராக்கெட் போல் நேராக அவனது அம்மாவிடம் சென்றான்.
"அம்மா தெரியுமா? இந்த என்கவுண்டர பண்ணதுக்காக கமிஷனர் என்ன பாராட்டிருக்காரு." என்றான் சிரித்தபடி.
"உன்னையா? எதுக்குடா?"
"பப்ளிக் உதவி இல்லைனா பண்ணிருக்க முடியாதுன்னு சொல்லீருக்காரு. நான் பப்ளிக் தான?
நான் இந்த என்கவுண்டர நேர்ல பாத்தேன் தெரியுமா? நேத்து ஸ்கூல் விட்டு வர்றப்போ. நல்ல வேளை எங்க ஸ்கூல் பாய்ஸ் எல்லாரையும் சில போலிஸ் அங்கிள் வந்து நிறுத்தி வச்சிட்டாங்க. டிராபிக் மொத்தமும் ஸ்டாப் பண்ணிட்டாங்க. போலிஸ் எவ்ளோ தைரியமா சண்டை போட்டாங்க தெரியுமா? நானும் பெரிய ஆளாகி போலீசா தான் ஆவேன்."
"உனக்கு பயமா இல்லையா?"
"எதுக்கு பயம்?"
"அங்க அவங்க சுடுரதெல்லாம் பாத்து பயமா இல்லை?"
"நான் தான் நெறைய தடவை பாத்திருக்கானே சினிமால."
கீழ்பாக்கம் மருத்துவமனை பிணவறை
பெரும் ஜனத்திரள். நொச்சி குப்பம் மொத்தமும் அங்கே இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி இருந்தது. என்கவுன்ட்டரில் இறந்தவர்கள் வீட்டு பெண்கள் தலைவிரி கோலமாக ஒப்பாரி வைத்தபடி இருந்தனர். அவர்களை அழுதவாறே தேற்றிக் கொண்டிருந்தனர் சில பெண்கள். அதில் ஒரு பெண்ணின் குரல் மட்டும் மிகவும் சத்தமாக இருந்தது.
"ஐயோ!!! பூபதி உங்க மாமாவ அநியாயமா கொண்ணுட்டாங்கலேடா.......அவரு வண்டி ஓட்ட தானடா கூப்டு போனாங்க. இப்படி எமனா வந்து என் புருஷன கொண்ணுட்டாங்கலேடா."
பூபதி அருகில் இருந்தவர் அவன் காதோரமாக, "உங்க அத்தைய சும்மா இருக்க சொல்லுப்பா. போலிஸ் நெனச்சா எது வேணாலும் செய்யும்னு தெர்யாதா? அதும் பாட்டுக்கு இப்படி கூவிக்கிநிருக்கு. என்கவுண்டர்ல செத்தவன் அல்லாரும் கிரிமினல் தான் போலிசுக்கு. இது இப்படி அழுதா மட்டும் உன் புருஷன் நல்லவன். தெரியாம கொன்னுட்டோம்னு போலிஸ் ஒத்துக்குமா?"
புரியாமல் தானும் சேர்ந்து அழுதது அந்தப் பெண்ணின் குழந்தையும். பூபதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சுத்தமாக கண்ணீர் வரவில்லை. கோவம் தான் வருகிறது. அவன் மாமா இது வரை தண்ணி அடித்து கூட அதிர்ந்து பேச மாட்டார். எப்படியாது அவனை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அடுத்த மாதம் சர்ச்சில் இருந்து காசு வருவதாக சொல்லி இருந்தார். அதில் தன்னை படிக்க வைத்து சொந்தமாக ஆட்டோ ஒன்று வாங்கி ஓட்டி பிழைச்சுக்கலாம் என்று சொல்லி இருந்தார். நேற்று அவர் வீட்டை விட்டு கிளம்பும் போது கூட அதை பற்றி பேசினார். அந்த ஞாயிற்று கிழமை வரப்போகும் ஞான ஸ்நாநத்தில் போட்டுக்கொள்ள நல்ல சட்டை ஒன்று வாங்க வேண்டுமென்று கூறினார். இன்னும் சிறிது நேரத்தில் பொட்டலமாக வெளியே வரப் போகிறார். கோபம்.......அவர் இழப்பை விட அவனது கைய்யலாகாதனம் நினைத்து தான் அதிக கோபம்.
தொடரும்......
3 Comments:
Great!!!
Waiting 4 d next part... Very interesting... Keep up ur good work
நல்ல இருக்கு.
ஆனா ரெண்டு சினிமா கதைய mix பண்ணி முன்றாவது கதை ready பண்ணுற மாதிரி இருக்கு. :-)
ok, thodar kathaya? sirukathai polave irukunga...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home